மட்டக்களப்பில் - ஆலயத்திற்கு வந்தவரை அடித்துக் கொன்ற பூசாரி



மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் பேய், பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்தில் நோயை குணப்படுத்த சென்ற சகோதரனும் சகோதரியுமான இருவர் மீது ஆலய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் ஆண் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (6 -12-2023) இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதலை மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுரா ஜெயலத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் தனது காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக பேய், பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் மாங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்துக்கு அடிக்கடி சென்று நோயை குணப்படுத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ தினம் (06-12-2023) அவரும் அவரது சகோதரியும் குறித்த ஆலயத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

இதன்போது, பூசகரின் மனைவிக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே காணப்பட்ட தவறான தொடர்பினை அறிந்த பூசகர் மனைவியை கத்தியால் தாக்க முற்றபட்டுள்ளார்.

இதன்போது அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் மனைவியுடன் தொடர்பில் இருந்தவர் மீதும் அவரது சகோதரி மீதும் குறித்த பூசகர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் அவர் உயிரிழந்ததுடன் சகோதரி படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த காரையும் அடித்து சேதப்படுத்திய பூசாரி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து நேற்று (07-12-2023)கிடைத்த தகவலையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை