ஸ்ரீலங்காவின் சிங்களத் தலைவர்களை சாந்தப்படுத்துவது இந்தியாவின் நெடுங்கால நலன்களுக்கு ஏற்றதன்று - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்



ஸ்ரீலங்காவின் சிங்களத் தலைவர்களை சாந்தப்படுத்துவது (appeasement) இந்தியாவின் நெடுங்கால நலன்களுக்கு ஏற்றதன்று என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா தீவு நாட்டின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) தலைவர்கள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் அண்மையில் இந்தியாவுக்கு சென்று வந்தமை பல வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியப் பயணத்தின் முதல் நாளாகிய பெப்ரவரி 5 ஆம் நாள் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்ற ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்கா, செயலாளர் நிகல் அபயசிங்கா, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித கேரத், செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அணில் ஜெயந்தா ஆகியோர் இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரையும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்துப் பேசினார்கள்.

ஜே.வி.பி, 1970 ஆம் ஆண்டில் வன்தாக்குதல்கள் தொடுத்த போதும், 1971 ஆம் ஆண்டில் உள்நாட்டு கலகம் செய்த போதும் அந்தக் கட்சியின் ஐந்து கொள்கைகளில் முதலாவது கொள்கை "இந்திய விரிவாக்கத்தை" எதிர்க்க வேண்டும் என்பதாக இருந்தது. தமிழர்கள் இந்திய விரிவாக்கத்தின் கருவிகள் என்றும் ஜே.வி.பி அறிவித்திருந்தது. 1987 ஆம் ஆண்டு அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடியது.

2006ம் ஆண்டு ஜே.வி.பி இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்காடியது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் உறுப்பு 1.4. கூறுவதாவது 

"வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று தாயகமாகவே இருந்துள்ளன". மேலும் ஒப்பந்தத்தின் உறுப்பு 2.1. வடகிழக்கு இணைப்புக்கு வழி கோலியது. ஜே.வி.பியின் சட்ட நடவடிக்கை வடகிழக்கு இணைப்பை நீக்கி தமிழர் தாயகத்தை இரு கூறுகளாக ஆக்கியது.

வடகிழக்கு இணைப்பு நீக்கப்பட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவதற்கு ஒரு முதன்மைக் காரணமாகவும் அமைந்தது.

மேலும் சுனாமி ஆழிப்பேரலையால் பாதிப்படைந்த தமிழர்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட சுனாமி பொதுக்கட்டமைப்பு செயற்பொறிமுறைக்கு எதிராக சட்ட வழக்குத் தொடுத்து அதனை முறியடித்து வெற்றியை கண்டதும் ஜே.வி.பி தான்.

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அதிகாரிகளுடனான இந்தியாவின் சந்திப்புகள் அரசுதந்திரம் சார்ந்த தேவைகள், வகைமுறைகள் என்ற கண்ணாடியின் ஊடாகவே பார்க்கப்பட்டுள்ளன. மறுபுறம், அண்மையில் இந்தியா, ஓர் அரசியல் கட்சியை அதிகார முறைப்படி சந்திக்கின்ற இந்த செயல் மன்னிக்க முடியாத ஒரு பொம்மலாட்டமாகும்.

ஜே.வி.பி-க்கு இந்தியாவின் அழைப்பு என்பது, ஆட்சி மாற்றம் இந்தியாவின் நலனுக்கு உதவக் கூடியது என்ற இந்திய தேசத்தின் தோற்றுப் போன பழைய கொள்கை மற்றும் "உத்திசார்" சிந்தனையின் தொடர்ச்சியே போலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனத்தின் பக்கம் சாய்ந்த போது இந்தியாவும் மேற்கு அரசுகளும் "நல்லாட்சி"க் கூட்டணியை வரவேற்றன.

ஆனால் இந்த "நல்லாட்சி"க் கூட்டணி, 99 ஆண்டுகால அம்பன்தோட்டா குத்தகை ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யவே இல்லை. சீனத்தின் பக்கம் ஸ்ரீலங்காவின் சாய்வு தொடர்ந்து நீடித்தது.

இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்ரமசிங்கா "நல்லாட்சி"க் கூட்டணியின் பிரதமராக இருந்தபோது 2017 ஆம் ஆண்டு இந்தியா புறக்கணித்த Belt and Road மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனத்துக்கு யாத்திரை மேற்கொண்டார். 

விக்ரமசிங்கா ஜனாதிபதியாக வந்த பின்னர் யுவான் யாங் 5 என்ற சீனக் கப்பலுக்கு இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ஸ்ரீலங்காவில் துறைமுகம் தரிக்க அனுமதி கொடுத்தார். இந்தியா மீண்டும் ஒருமுறை இப்போதும் பழையன கழிதல் புதியன புகுதல் என்ற சிந்தனையில் இருப்பது போல் தோன்றுகின்றது. புதியன என்பது ஜே.வி.பி தலைமையிலான ஸ்ரீலங்கா அரசையோ அல்லது இதே நோக்கத்தோடு இன்னும் மென்மையான அணுகுமுறையை மேற்கொண்டு ஜே.வி.பி-யை பயன்படுத்தி தற்போதைய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதையோ குறிக்கும்.

உண்மை என்னவென்றால், சிங்கள அரசியல் சமூகம் வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கு எதிரானதாகவே இருந்துள்ளது. 1971 ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானிய விமானங்கள் கொழும்பு விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள ஸ்ரீலங்கா அனுமதித்தது. 

1987 ஆம் ஆண்டு இந்தியாவை எதிர்க்குமுகமாக "பம்பாய் வெங்காயம்", "மைசூர் பருப்பு" ஆகியவற்றுக்கு "பெரிய வெங்காயம்", "சிவப்பு பருப்பு" என்று புதிய பெயர்களை சிங்களவர்கள் சூட்டினார்கள். பகைவனை பகைவன் நண்பன் என்பார்கள். இன்று சிறீலங்கா சீனத்தின் குறுநில அரசாக மாறிக்கொண்டிருக்கிறது.

இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ந்து வரும் இந்திய நாடு உலகப் பெரு வல்லரசுகளுக்கு எதிரே அறத்துணிவுடன் நிமிர்ந்து நிற்பதை உக்ரைன் போரில் அதன் வகிபாகம் காட்டி நிற்கின்றது. அத்தகைய இந்தியா குட்டி வங்ரோத்து ஸ்ரீலங்காவை தன் செல்வாக்கு வலயத்தில் வைத்துக் கொள்வதற்காக நயந்து கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடிப்பதை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. இது அமைச்சர் ஜெய்சங்கர் தெளிந்துரைத்து முன்னெடுக்கும் "இந்திய வழி"

சாணக்கியமாக இருக்க முடியாது. ஸ்ரீலங்கா தொடர்பான மூலோபாய தெளிவு இந்தியாவுக்கு இல்லை என்றே தோன்றுகின்றது.

ஸ்ரீலங்கா தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கை என்பது விழுமியங்களின் அடிப்படையிலும் நலன்களின் அடிப்படையிலும் அமைந்திருக்க வேண்டும் என்று தமிழர்கள் ஆகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஸ்ரீலங்கா தீவு தொடர்பான தன் கொள்கையை இந்தியா மாற்றிக் கொள்ளாவிட்டால் இலங்கைத் தீவு முழுவதும் இன்னொரு மாலைதீவுகள் (Maldives) ஆகிவிடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை