ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக போர் தொடுத்தால், அதற்கும் அதிகமாக மோசமான விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் ஈரான், சக்திவாய்ந்த அணுகுண்டுகளை உருவாக்க தீவிரமாக முயற்சிக்கிறது என நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது ஈரான் 87% செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருப்பதாகவும், இதை 90% ஆக மாற்றினால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என சர்வதேச அணுசக்தி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை திடீரென தாக்குதல் நடத்தியது. கடந்த 7 நாட்களாக இரு நாடுகளுக்கிடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 20 அணுசக்தி தளங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளன. மேலும், 14 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான், தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட்டு சரணடைய வேண்டும் என அமெரிக்கா மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், அதற்கெல்லாம் இடமில்லை என ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக போர் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு ஆதரவாக உலக நாடுகள் இருபுறமாகப் பிரிந்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து மேற்கத்திய நாடுகளும் இஸ்ரேலுக்கு துணையாக உள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டை பாதியிலேயே விட்டு வெளியேறி அமெரிக்கா திரும்பியுள்ளார். ஈரான் மீது நேரடி போர் தொடங்குவது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப்-ன் எச்சரிக்கை:
நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய ட்ரம்ப்,
“ஈரான் மீது போர் தொடுக்க விருப்பம் இல்லை. ஆனால், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த வாரம் பெரிய சம்பவங்கள் நடக்கலாம்,” என்று கூறினார். இது, ஈரானுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதப்படுகிறது.
புளூம்பர்க் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “அடுத்த சில நாட்களில் அமெரிக்கா ஈரான் மீது போர் தொடக்கக்கூடும். இதுகுறித்து ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்,” என தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் சன்னி – ஷியா முஸ்லிம்கள் இடையே மத உரசல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில், சன்னி முஸ்லிம் பெருமளவில் வசிக்கும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் இஸ்ரேல் விவகாரத்தில் சாதுவான போக்கை எடுத்துள்ளன.
ஈரான் ஆதரவு நாடுகள்
ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, வடகொரியா, வெனிசுவேலா, ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. துருக்கி, அஜர்பைஜான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளும் ஈரானுக்கு துணையாக உள்ளன. அமெரிக்க அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் மவுன நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எனினும், இஸ்ரேல் ஈரான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தியால் பாகிஸ்தான் போரில் நுழையும் என்றும், இஸ்ரேலின் மீது அணுகுண்டுகள் வீசப்படும் என்றும் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி மோசென் ரீஸி கூறியிருந்தார்.
ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசீப் அதை உடனடியாக மறுத்தார்: “ஈரானுக்கு எங்களால் எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் தனது அணுகுண்டுகளை, மக்கள் மற்றும் நாட்டை காப்பாற்றுவதற்காக மட்டுமே வைத்திருக்கிறது,” என்று தெளிவுபடுத்தினார்.
ரஷ்யா ஆதரவு
உக்ரைன் போரில் ஈரானால் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்ட ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுத உதவிகள் குறிப்பிடத்தக்கவை. தற்போது, ரஷ்யா “க்ராசுகா–4” எனப்படும் உயர் தொழில்நுட்ப மின்னணு ஏவுகணை தடுப்பு சாதனத்தை ஈரானுக்கு வழங்கியுள்ளது. இதனால் இஸ்ரேலின் ஏவுகணைகள் திசை மாறி, சில நேரங்களில் திரும்பிச் சென்று இஸ்ரேலைதான் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்ஜி ரயாப்கோவ் கூறியதாவது: “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடங்கினால், அதற்கு எதிராக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என எச்சரித்தார்.
அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாவது: “இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட, சமரச முயற்சிக்கு ரஷ்யா தயாராக உள்ளது. எங்களது திட்டங்களை மூன்று நாடுகளுக்கும் (ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா) தெரிவித்துள்ளோம்,” என தெரிவித்தார்.
“ரஷ்யா – ஈரான் உறவுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கமாகவே உள்ளது,” என்றும் அவர் கூறினார். தற்போது ஈரானின் அணுசக்தி தளங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரஷ்ய நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எச்சரித்துள்ளது.
சீனாவின் எச்சரிக்கை
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது: “ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமானால், சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தே தீரும். சர்வதேச சட்டங்களை மீறும் காரியங்களை நாம் மெதுவாகப் பார்க்கமாட்டோம்,” என எச்சரித்தார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், “இஸ்ரேல் – ஈரான் போரில் அமெரிக்கா தலையிடக்கூடாது,” என கடந்த வாரம் வெளியுறவுத் துறையின் வாயிலாக எச்சரித்தார்.
வடகொரியாவின் ஆயுத தயாரிப்பு
இஸ்ரேல் – ஈரான் போர் அதிகரிக்கின்ற சூழ்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன், ஆயுத உற்பத்தியை பலமடங்காக அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். அவர் நேரடியாக ஆயுத ஆலைகளுக்குச் சென்று கண்காணிப்பும் மேற்கொண்டு வருகிறார்.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டுகளில் வடகொரியா, சுமார் 20,000 கன்டெய்னர்கள் அளவிலான ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது, ஈரானுக்கும் ஆயுதங்கள் அனுப்பப்படலாம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைய சூழ்நிலையில், இஸ்ரேல் – ஈரான் போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் மிக அதிகமாக உள்ளது.
இதுவே நடக்குமானால், உலகளாவிய பேரழிவு ஏற்படும் என சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.