யானையின் தாக்குதலினால் வயோதிபரொருவர் படுகாயம்


திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் (18) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளானவர் மூதூர்-கடற்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த கே சந்திரகுமார் (55 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடற்கரைச் சேனை-சம்புக்கலி பகுதியில் உள்ள அவரது வயலுக்கு சென்ற போது, யானை தாக்கியதாகவும் இதனையடுத்து சம்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில்,மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபரை அம்பியூலன்ஸ் வண்டி மூலம் ஏற்றி சென்ற வேளை கட்டாக்காலி மாடுகள் வீதியில் உறங்கிக்கொண்டிருந்தமையினால் அம்பியுலன்ஸ் சாரதியும், ஊழியரும் சிரமங்களை எதிர் நோக்கியதாகவும் தெரியவருகின்றது.

மாடுகள் வீதிகளில் நிற்பதனால் வீதி விபத்துக்கள் மற்றும் அவசரமாக நோயாளர்களை ஏற்றிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளை வீதிகளில் விடும் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
புதியது பழையவை