மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 02-05-2021ம் திகதி மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
அவரை 74 மணித்தியாலங்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளின் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி ஏ.இளங்கோவன் அவர்களினால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் இன்று 05-05-2021 ம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் கறுப்பையா ஜீவராணி அவர்களின் முன்நிலையில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.
இவரது கைது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன அவர்கள் தெரிவித்திருந்தாவது அவரிடம் இருந்து நவீன கணினி மற்றும் கைத்தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவேற்றியுள்ளார் எனவும் சந்தேக நபருக்கு சொந்தமான இணையவழி கணக்குகளை சோதனைக்குட்படுத்திய போது அவர் அத்தகைய கருத்துக்களை பதிவேற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.