விடுதலைப் புலிகளுக்கு மறுக்கப்பட்ட அதிகாரம் வெளிநாட்டிற்கு...


தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார அலகை நிராகரித்த பெரும்பான்மை சிங்கள அரசு அதிகாரப் பகிர்வு அலகினை வெளிநாட்டிற்கு வழங்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பூகோள அரசியல் அதிகாரப் போட்டிக்குள் நாட்டைச் சிக்க வைப்பதால் இந்த சட்டமூலத்தை தாம் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

இந்தச் சபையில் இருக்கும் பெரும்பான்மையினர் மத்தியில் இனவாதம் மற்றும் வகுப்பு வாதம் தலையோங்கி நிற்கிறது.

சமாதான காலப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் இருந்த நேரத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுதலைப்புலிகளினால் இடைக்கால தன்னாட்சி அதிகார அலகு என்ற ஒரு விடயம் முன்வைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்த்திருந்தது. நீங்கள் அழிக்கவும் இனவழிப்பை மேற்கொள்வதையும் வலிந்து எடுத்துக் கொண்டீர்கள்.

ஆனால் நீங்கள் எந்தவித மாற்றமுமின்றி, அதேபோன்ற ஒரு அதிகாரப் பகிர்வு அலகினை உருவாக்கியுள்ளீர்கள். இது முற்றிலும் பூகோள அரசியலை மையப்படுத்திய ஒன்றாகவே இருக்கின்றது. பூகோள அரசியல் அதிகார போட்டிக்கு இந்த அரசாங்கம் இடம்கொடுத்துள்ளது.

இதனாலே நாங்கள் இதனை எதிர்க்கின்றோம். என்ன நடக்கிறது என்பதை சிங்கள மக்களும் புரிந்து கொள்ளுவார்கள் என்பதை நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
புதியது பழையவை