76 ஆவது வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு

இலங்கையின், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான, வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு, இன்று(10) மாலை நடைபெறவுள்ளது.

76 ஆவது வரவு செலவுத்திட்டம், கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்தவகையில், பசில் ராஜபக்ஷ, நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும் என்பதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான சமகால அரசாங்கத்தின், இரண்டாவது வரவு செலவுத்திட்டம் ஆகும்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான சேவைக்காக மதிப்பிடப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் செலவீனத்திற்கு, அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

அரசியலமைப்புக்கு அமைவாக, அரசாங்கத்தின் நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு, நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், வரி விதிப்பு, திரட்டு நிதியத்தில் இருந்து அல்லது அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்தில் இருந்து பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களுக்கு, நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

அந்தவகையில், வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டு வாசிப்புக்கள் இடம்பெற்ற நிலையில், அதற்கு ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான, வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு, இன்று நடைபெறவுள்ளது.
புதியது பழையவை