புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் 79 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றுள் 06 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் சட்டரீதியான சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு பதிவு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தமிழ் மக்கள் கூட்டணி, புதிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய மூன்று அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி கட்சி , நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.