இலங்கைக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த 2023ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
‘உலகெங்கிலும் ஜனநாயகங்கள் தாழ்த்தப்பட்டிருக்கின்றன. சட்டத்தின் ஆட்சி இல்லாமல் எந்த ஜனநாயகமும் நிற்காது. நீங்கள் அனைவரும் அந்த விலைமதிப்பற்ற ஆட்சியின் பாதுகாவலர்கள். அன்றாட இலங்கையர்கள் தங்கள் கவலைகளை அமைதியான முறையில் வெளிப்படுத்துவதற்கும் அவர்களின் அரசாங்கத்தில் பங்கேற்பதற்கும் உள்ள உரிமைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது அசைக்க முடியாதது.
இலங்கையின் சுதந்திரமான தேர்தல்களின் பெருமைமிக்க வரலாறு அந்த உரிமைகளுக்கு அடிகோலுகிறது. குடிமக்களுக்கு சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து அரசாங்கத்துடன் நேரடியாக வாதிடும் சந்தர்ப்பத்தை வழங்குதல் மற்றும் சுதந்திரமான நீதித்துறையில் தகுதியான சட்டப் பிரதிநிதித்துவம் வழங்கல் என்பன முக்கியமானவை. அதனால்தான் உள்ளூராட்சித் தேர்தல்கள் குறித்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். உள்ளூராட்சித் தேர்தல் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது’ என ஜூலி சங் குறிப்பிட்டார்.