மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் மழை - தாழ் நிலங்கள் வெள்ளத்தில்




மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையினால் மீண்டும் தாழ் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இன்று(19-01-2024) அதிகாலை வேளையிலிருந்து மீண்டும் பலத்த மழை பொழிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கடந்தவாரம் முதல் பெய்துவந்த பலத்த மழை வீழ்ச்சியால் தேங்கியுள்ள வெள்ள நீர் வற்றாத நிலையில் இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குளங்களின் நீர்மட்டங்கள்
மக்கள் குடியிருப்புக்களிலும், வீதிகளிலும், மீண்டும் மழைநீர் தேக்கமடைந்து வழிந்தோட முடியாத நிலமை ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில அமைந்துள்ள குளங்களின் நீர்மட்டங்களின் நிலமை தொடர்பிலும் பொறியியலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.



அதன் படி இன்று(19-01-2024) காலை 7 மணிவரையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 31அடி 3அங்குலமும், உறுகாமம் உளத்தின் நீர்மட்டம் 13அடி 9அங்குலமும், வாகனேரிக் குளத்தின் நீரமட்டம் 18அடி 10 அங்குலமும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 6அங்குலமும், கித்துள்வெவக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 2அங்குலமும், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 3 அங்குலமும், நவகிரிக்குத்தின் நீர்மட்டம் 29அடி 6அங்குலமும்,  தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 3அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக குறித்த குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் உன்னிச்சைப் பகுதியில் 3.5மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 17மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 26.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவு பகுதியில் 12 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 24 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை