மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலத்துக்கருகில் அடி காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன்



பலத்த அடி காயங்களுடன் இன்று ஓட்டமாவடி பாலத்துக்கருகிலிருந்து மீட்கப்பட்ட இளைஞன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலத்துக்கருகில் இரத்தக்காயங்களுடன் இளைஞன் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கல்குடா அகீல் அனர்த்த அவசர சேவைப்பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய அதன் பணிப்பாளர் நியாஸ் ஹாஜியார் குழுவினர் இளைஞனை மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

புத்தளம் பஸ் வண்டியில் வந்த குறித்த இளைஞனும் இன்னுமொரு இளைஞனும் ஓட்டமாவடி - நாவலடிப் பகுதியில் பஸ் வண்டி நிறுத்தப்பட்டிருந்த போது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த இளைஞன் மீது மற்றைய இளைஞன் பொல்லால் தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயங்களுக்குள்ளான இளைஞன் புத்தளம் பகுதியைச்சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை