மட்டக்களப்பில் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!



தீபாவளி தினமான நேற்று (31-10-2024) மாலை பாவனையற்ற கிணறொன்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, பலாச்சோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில்...


பாவனையற்ற கிணற்றை துருப்பிடித்த தகரத்தினால் மூடியும், அதில் பலமற்ற ஏணியொன்று சாத்தி வைக்கப்பட்டும் இருந்துள்ளது.

இந்நிலையில், சிறுவன் அதில் ஏறி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின்போது பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு ஏறாவூர் பொலிஸாருடன் வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர், முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்தை அனுப்பிவைத்தார்.

அதனை தொடர்ந்து சிறுவனின் உடல் இன்று (01-11-2024 உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
புதியது பழையவை