மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரலாற்றுச் சாதனை!



கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சையை கடந்த 15 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி
தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (21-05-2025) புதன்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட பொது வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை மிக வெற்றிகரமாக இடம்பெற்றது. அக்குழுவினருக்கு வைத்தியசாலை சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

உயிருடனுள்ள நன்கொடையாளரின் சிறுநீரகத்தைப்பெற்று 45 வயதுடைய நோயாளருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சையினை மேற்கொண்டதன் பின்னர் குறித்த இருவரும் அவர்களுக்கான சிகிச்சையைப் பெற்று
சிறந்த தேகாரோக்கியத்துடன் இன்றைய தினம் (21) திகதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பாரிய சத்திர சிகிச்சைக்காக 3 பிரதான குழுவாக பிரிந்து இச்சிகிச்சையை வழங்கியுள்ளதுடன், முதலாவது குழுவினர்கள் நன்கொடையாளரையும் அவயம் பெறுநரையும் பராமரித்ததுடன், சத்திர சிகிச்சை அணியினர் மற்றும் மயக்க மருத்து வழங்கும் குழுவினருடன் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உதவியாளர்கள் இணைந்து அவர்களின் பங்களிப்புடன் சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களின் அனுமதியுடன் இந்த மாற்று அறுவை சிகிச்சை இடம்பெற்றதாகவும் இதற்காக உதவிய நன்கொடையாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பராமரிப்பதற்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைள் இவர்களுக்காக மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மாவட்டத்தில் அங்க அவையங்களை தானம் செய்வதற்கு மக்கள் முன் வர வேண்டுமென இதன்போது வைத்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
 
போதனா வைத்தியசாலையில் 1,500 பாரிய சத்திர சிகிச்சையும் 12,500 சிறிய சத்திர சிகிக்சையும் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை