மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டம் - மாநகர முதல்வருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று(18.08.2025) முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இன்று (18.08.2025)நண்பகல் 12 மணி வரை  வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில்  குறித்த  நிர்வாக முடக்கல் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், காலையில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.


அதேநேரம், அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கடைகளை திறக்குமாறு குறிப்பிட்ட நிலையில், அவர்களுக்கும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடைகளை மூடுமாறு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தழுவிய கதவடைப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பில் பெருமளவு ஆதரவு வழங்கப்படவில்லை  எனக் கூறப்படுகின்றது.


மட்டக்களப்பு நகரை தவிர்த்த ஏனைய பிரதேசங்களில் காலையில் வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு இயங்கியுள்ளன.

அதேவேளை, மட்டக்களப்பு நகரில் காலை ஒரு சில கடைகளை தவிர ஏனைய கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், மாநகர சபை எல்லைக்குட்பட்ட சந்தைக் கட்டிடம் பூட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை