மட்டக்களப்பு ஊடக அமையத்திற்கு இன்று(24.06.2026) மாலை விஜயம் செய்த இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார கசல்பார்த் அவர்களிடம், மட்டு ஊடக நிர்வாகத்தினர் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும், புதிய ஊடக சாசனத்தைத் தடுத்து நிறுத்தவும் ஜேர்மன் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் சந்திக்கும் தொடர் விசாரணைகள் மற்றும் சவால்கள் குறித்து தூதுவரிடம் விவரிக்கப்பட்டு, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரப்பட்டது.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எதிர்கொள்ளும் தற்காலப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அரசியல் தீர்வை வழங்க ஜேர்மனி ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பில் மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வ. கிருஷ்ணகுமார், பொருளாளர் கிருஷ்டிராஜ் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறினர்.