கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டில் வசிக்கும் வீட்டுப் பணிப் பெண்கள் மற்றும் விதவைகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் (03) நடைபெற்ற பெண்கள் வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டிலுள்ள வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் விதவைகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படும்.
இதனை வழிநடத்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பதி நியமிக்கப்பட உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
"எங்கள் கலாசாரங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சில தடைகள் இருந்தாலும், நம் கலாசாரத்தின் மூலம் பெண்கள் நம் நாட்டில் உயர்த்தப்பட்டுள்ளனர்.
பெண் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். பெரும்பாலான விதவைகள் எங்கள் மாகாணத்தில் வாழ்கின்றனர்.
அவர்களுக்காக பல தொழில்முனைவோர் திட்டங்களை எதிர்காலத்தில் தொடங்க எதிர்பார்க்கிறோம்.
மகளிர் தினத்திற்கான போராட்டம் தொடங்கியபோது, ஒரு பெண்ணின் சம்பளம் ஒரு ஆணின் சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகவே இருந்தது.
ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்கள் மிகவும் அநீதிக்கு ஆளான காலங்கள் இருந்தன. மில்லியன் கணக்கான பெண்கள் வீதிகளில் இறங்கி பெண்களுக்காக போராடினர்.
அவர்கள் கடந்த காலங்களில் எங்களுக்காக போராடி தங்கள் உரிமைகளை வென்றார்கள். மகளிர் தினம் அந்த போராட்டங்களின் ஒரு முடிவு மட்டுமே.
இந்த போராட்டங்களின் மூலம், பெண்களின் சுதந்திரம், பெண்களின் வாக்குரிமை, பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் பெண்களுக்கான கல்விக்கான வாய்ப்பு ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன.
இன்று பல்கலைக்கழக கல்வியில் ஆண்களை விட அதிகமான பெண்கள் உள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபிலா நுவான் அத்துகோரலா, முன்னாள் மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷனா பாடிகோரலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.