காவல்துறையினர் எனக்கூறி நகை கொள்ளை


வவுனியாவில் கடந்தவாரம் காவல்துறையினர் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் வவுனியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை காவல்துறையினர் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனைசெய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இருவீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை வவுனியா காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகத்தர் என்று கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது
புதியது பழையவை