கல்முனை தமிழர்பிரதேசத்தில் மற்றுமொரு காணி அபகரிப்பா?

கல்முனை தமிழர் பிரதேசத்திலுள்ள அரசகாணியை மதில்கட்டி அபகரிக்க முற்பட்டசமயம், உரிய அதிகாரிகள் தடுத்துநிறுத்திய சம்பவம் நேற்று(18) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கல்முனை 01 சி கிராம சேவகர் பிரிவிலுள்ள  காலா காலமாக  மழை வெள்ள நீர் வடிந்து தேங்கி நிற்கும் வடிச்சல் குளத்தின் ஒரு பகுதியில் தனியார் ஒருவரால் சுற்றுமதில் அமைக்கப்பட்டது.

இத்தனைக்கும் அரச காணி என பதாதையும் அங்கு உள்ளது.அதனையும் மீறி குறித்த கல்முனைக்குடி நபர் அக்காணியில் மதில் கட்ட முனைந்துள்ளார்.

உரியவேளையில் அரச காணிஅதிகாரிகள், கிராமசேவையாளர், சமுகஆர்வலர்கள், பொதுமக்கள் தலையிட்டதன் காணரமாக அது தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.

அரச காணி என காட்சிப்படுத்தப்பட்ட குறித்த காணியில் சுற்று மதில் அமைக்கப்படும் தகவல் அறிந்து குறித்த 1சி பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் த.சந்திரகுமாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதனையடுத்து அவர்  கல்முனை வடக்கு பிரதேச செயலக காணி பிரிவு அதிகாரிகள் சகிதம் அங்கு சென்றார்.

சம்பவத்தையறிந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்  கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் .தமிழ் இளைஞர் சேனை தலைவர் ந.சங்கீத் மற்றும் சேனை உறுப்பினர்கள் என பலர் ஸ்தலத்திற்கு   விரைந்தனர்.

அங்கு ஒருவித பதட்டம் நிலவியது. இருசாராருக்கும் வாக்குவாதம் இடம்பெற்றது.

குறித்த காணி காலா காலாமாக நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து வடிந்து வரும் மழை வெள்ள நீர் தேங்கி நிற்கும் குளம் இது. "அரச காணி" என பதாதையும் இங்கு உள்ளது.

ஆகவே இங்கு கட்டுமான பணிகளை செய்ய வேண்டாம். காணிக்கான சட்ரீதியான ஆவணம் இருந்தால் முதலில் அதனை அலுவலகத்திற்கு எடுத்து வாருங்கள் 'என காணிக்கு உரிமை கோரிய கல்முனைக்குடி நபர்களிடம் ,அர அதிகாரிகளால் கூறப்பட்டதை தொடர்ந்து சுற்றுமதில் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில், இதே 1சி பிரிவில் உள்ள மற்றுமொரு அரச காணியும் தனியாரால் மண் நிரப்பப்பட்டு சர்ச்சைக்குள்ளாகி அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



புதியது பழையவை