இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், நாளை 01-10-2021ஆம் திகதி அதிகாலை தளர்த்தப்படவுள்ள நிலையில், மக்கள் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தனவால் இது வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது
உற்சவங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், விருந்துபசார நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை பதிவு திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த திருமண நிகழ்வுகளில் 10 பேருக்கு மாத்திரமே கலந்துக்கொள்ள முடியும்.
16ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையான திருமண நிகழ்வுகளுக்கு 50 பேருக்கு அனுமதி.
பொது போக்குவரத்து சேவைகள் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை அழைத்து செல்ல வேண்டும்
பஸ்களில் ஜன்னல்கள் திறந்து பயணிப்பது அவசியமானது என அந்த வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குளிரூட்டப்பட்ட பஸ் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் முகக் கவசங்களை உரிய வகையில் அணிதல் கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகை அலங்கார நிலையங்களுக்கு (சலூன்) பிரவேசிக்கும் போது, நேரத்தை ஒதுக்கி, அங்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை உரிய சுகாதார வழிமுறைகளுக்கு அமைய திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடைகள், அங்காடிகளில் 10% அளவிலேயே சேவைகள் வழங்கப்பட வேண்டும்.
நாளைய தினம் முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஒருவரின் மரணத்திற்கு குறைந்தது 10 பேருக்கு மட்டுமே அனுமதி.
