கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு, சுதேச வைத்திய முறையில் வைத்தியம் வழங்குவதற்கும், மக்களுக்கு உள்ளூர் மருந்துகளை வழங்குவதற்கும், நோயிலிருந்து விடுபட தேவையான மருந்துகளை பயன்படுத்தவும், ஊக்குவிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் ஆயுர்வேத பணிக்குழுவை நியமித்துள்ளார்.
அந்த வகையில், இந்த பணிக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த சுலைமாலெவ்வை முஹம்மது நாஸிறூன், இம்மாதம் 06ம் திகதி முதல் செயற்படும் வண்ணம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் விரிவுரையாளரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த நிபுணர் குழு அமைப்பான வியத்மகேயின் அம்பாறை பிராந்திய உறுப்பினரும், நிந்தவூர் டுடே முகநூல் செய்திச்சேவையின் செய்திப் பிரிவிற்கான பொறுப்பதிகாரியும், அண்மையில் உதயமான நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரும் ஆவார்.
இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை விரைவில் வழங்குவதற்கான திட்டத்தை நிறைவேற்றும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இக்குழு செயல்படுத்தவுள்ளது. இதில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை பிரதிதிதித்துவப்படுத்தும் வகையில் 17 உறுப்பினர்களை உள்ளடக்கிய நபர்களை ஆளுநர் நியமித்துள்ளார்.
மேலும், வேகமாக பரவும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த உள்ளூர் மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தை ஊக்குவிப்பதில் இந்த பணிக்குழு நிபுணத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவைளை சுலைமான் நாஸிறூன், தன்னுடைய இளமைப் பருவத்திலேயே பல சமூக சேவைகளில் பல பணிகள் செய்து வருவதுடன், இவர் நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். இவர் நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை - எம்.ஐ. லத்திபா ஆகியோர்களின் இளைய புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.