மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இடம் பெற்ற நிலையில், குறித்த தவிசாளர் தெரிவில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய தவிசாளர் தெரிவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும், காதர் மஸ்தான் ஆகியோருக்கும்  கலந்து கொள்ள பொலிஸார் அனுமதி  வழங்க மறுத்துள்ளனர்.

மன்னார் பிரதேச சபையைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் கலந்து கொள்ளச் சென்ற மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பிரதேச சபையின் பணியாளர்களும் சோதனையின் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வடமாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம்(29) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை