கடவுளும் நீதிவானுமே எங்களுக்கு நீதியை தரவேண்டும் எனவும் சாட்சியமளிப்பதற்கு சாட்சிகள் அச்சம்கொள்வதாகவும் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாகி சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (04) திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் இன்று வழக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்தி வழக்கில் இன்று சாட்சியங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இதுவரை ஒரே ஒரு சாட்சியை மாத்திரம்தான் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சாட்சியங்கள் தொடர்பில் உயிரிழந்தவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான ந.கமலதாசன்,சுதர்சன் ஆகியோரால் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அடுத்த தவணையில் ஏனைய சாட்சியங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக பொலிசாரினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதே போன்று கொல்லப்பட்ட உறவினர்களின் இரத்த மாதிரியை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பொலிசாரினால் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சட்ட மருத்துவ வைத்திய அதிகாரியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்தமாதிரிகளைக்கொண்டு அது தொடர்பான விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
21-06-2021 அன்று மட்டக்களப்பு,மன்ரேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக அவரது பாதுகாப்பு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மகாலிங்கம் பாலசுந்தரம் என்னும் இளைஞர் உயிரிழந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தந்தையான வேலுப்போடி மகாலிங்கம், தாயாரான மா.சின்னப்பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
எங்களது மகனை கொலைசெய்வதை கண்டவர்கள் இருக்கின்றார்கள்.ஆனால் அரசியல்வாதிகளுக்கு பயந்து சாட்சியமளிக்க தயங்குகின்றனர்.கடவுளும் நீதிவானுமே எங்களுக்கு நீதியை தரவேண்டும்.
