மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் வழங்கியுள்ள ஆலோசனை

நாட்டில் பதிவாளர் பதவியை வழங்கும் போது நீதியமைச்சுடன் கலந்துரையாடி அவர்களுக்குச் சமாதான நீதவான் பதவியையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று (26) அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடளாவிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவாளர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவாளர்களுக்குக் காணப்படும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் துஷ்மந்த கருணாநாயக்க அவர்கள் இதன்போது கருத்து முன்வைத்தார்.

ஊதியம் இன்றி கொடுப்பனவு அடிப்படையில் பதிவாளர்கள் தொழில்சார் சேவையில் ஈடுபட்டிருப்பதுடன், தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்குச் சமாதான நீதவான் பொறுப்பு இன்மை சிக்கலுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவாளர்கள் 24 மணிநேரம் முழுவதும் சேவையில் ஈடுபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய துஷ்மந்த கருணாநாயக்க, ஊதியம் இன்மையால் முறையான காப்புறுதி திட்டமொன்றை தமது உறுப்பினர்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கமைய பதிவாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய உரிய காப்புறுதி திட்டமொன்று குறித்து ஆராயுமாறு அச்சந்தர்ப்பத்திலேயே பதிவாளர் நாயகம் W.M.M.B.வீரசேகரவுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான முன்னுரிமை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

பிறப்பு, இறப்பு பதிவின் போது தற்போது கிடைக்கும் 75 ரூபாய் கொடுப்பனவை 150 ரூபாய் வரையும், அலுவலக எழுது பொருட்கள் கொடுப்பனவை 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையும் உயர்த்துவதற்கும், சேவை நிறைவின் போது 550000 ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரையான பணிக்கொடை கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் 2022 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் இதன்போது அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ச பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ண, அரச சேவை, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J.ரத்னசிறி, தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் G.M.J.K.குணசேகர, பதிவாளர் நாயகம் W.M.M.B.வீரசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
புதியது பழையவை