இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு நீதி கோரி மற்றுமொரு ஆர்ப்பாட்டம் கனடாவில் இன்று(25) நடைபெற்றுள்ளது.
நீதியை நிறைவேற்றுவதற்கான கனேடிய ஒத்துழைப்பு அமைப்பினரினால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனம், மதம் மற்றும் கட்சி பேதமின்றி அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளியிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
தாக்குதல் நடைபெற்று 30 மாதங்கள் கடந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை இன்னும் சட்டத்திற்கு முன் கொண்டுவர முடியவில்லை.
இதன் காரணமாக இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட உண்மையான சூத்திரதாரிகளை வெளிகொண்டு வருமாறு வலியுறுத்தியும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட கோரியும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.



