சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் அம்மையார், சிறிலங்கா அரச தலைவரை சந்தித்தார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள்வதற்காக அலெய்னா அம்மையார் வழங்கிய ஒத்துழைப்புகளை அரச தலைவர் பாராட்டினார்.
மேலும், கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஏற்றல், மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கும், அரச தலைவர் நன்றி தெரிவித்தார்.
இதன்போது, தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் தொற்றொழிப்புச் செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கும் தூதுவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் தனது சேவையைச் சிறப்பாக முன்னெடுக்க இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்காக, அரச தலைவருக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்தார்.
அலெய்னா பீ.டெப்லிட்ஸ் அம்மையாரின் எதிர்காலச் செயற்பாடுகள் சிறப்புப் பெற, அரச தலைவர் இதன்போது தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
