மட்டக்களப்பில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிக்குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு தங்குதடையின்றி சேதனை பசளை உள்ளிட்ட விவசாயத்திற்கு தேவையானவற்றை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிக்குழுவினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிக்குழு மட்டக்களப்பிற்கு நேற்று (28) விஜயம் செய்துள்ளனர். இதன் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் நஞ்சற்ற விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இரசாயன உர பாவனையினை நிறுத்தி சேதனைப்பசளையினை ஊக்குவிக்கும் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிக்குழு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் (K.Karunakaran) உள்ளிட்ட மாவட்ட விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் தேசிய உரச் செயலக அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் தேவைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வினை விரைவுபடுத்துவது தொடர்பாகவும், விவசாயிகளுக்கு தேவையான சேதனை பசளையினை களஞ்சியப்படுத்தி அவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் தங்குதடையின்றி விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை உடன் மேற்கொள்ளுமாறு குறித்த பணிக்குழுவினர் அதிகாரிகளை பணித்துள்ளனர்.

அதே போன்று விவசாயிகளுக்கான இரசாயன பசளை மற்றும் கிருமிநாசினிகளுக்கு பதிலாக பாவிக்கக்கூடிய திரவ வகைகளான நனோ நைற்றஜன், வயோ மற்றும் ஓகானிக் திரவ வகைகள் போன்றவற்றை மாவட்ட விவசாயிகளுக்கு தடையின்று விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை பணித்துள்ளனர்.


புதியது பழையவை