மட்டக்களப்பில் இருக்கும் அபிவிருத்தி ஆட்சியாளர்கள் இருவரும் மண் மாபியாக்களுடன் இணைந்து கூடுதலான நகர்வைமேற்கொண்டு செல்கின்றார்கள் என்பதை மக்கள் தற்போது அறிந்துள்ளார்கள் என்று ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சி .சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வினால் இயற்கை சூழல் பாரியளவில் அழிவடைந்துள்ளது. ஆகவே இன்று காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவை பொறுத்தவரையில் உங்களுக்கு தெரியும் பாரிய அளவிலான மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதை தடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக பாடுபட்டு வருகின்றது. அதேபோன்று தான் காடுகளை அழித்து தேக்கு மரங்களை வெட்டி ஏற்றிக்கொண்டு செல்கின்றதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே மாவட்டத்தை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களும் முன்வந்து மரங்களை நடவேண்டும் மரங்களை நடுவதன் மூலமாகவே இயற்கையின் சீற்றத்தில் இருந்து நாம் பாதுகாக்கப்படுவோம் இயற்கையும் எம்மை பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
