மட்டக்களப்பு -வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் திடீரென இரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக படகில் உயிரிழந்த நிலையில் அவருடன் சென்றவர்கள் மீண்டும் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு அவரது சடலத்தை கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அசன்பாவா வீதி பிறைந்துறையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான படகு சாரதி (ஸ்கீப்பர்) எம்.ஐ.எம்.பாறுக் (வயது 47) என்பவரே மாரடைப்பு காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை