பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா அலரி மாளிகையில் நடைபெற்றது.

விவசாய நடவடிக்கைகளுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தை மாதம் முதல் நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமரின் ஆலோசனைக்கமைய இம்முறை தைப்பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழா இந்து கலாசார அம்சங்களுடன் நடைபெற்றதுடன், பிரதமருடன், பிரதமரின் பாரியார் சிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஸவும் விழாவில் கலந்து கொண்டார்.
நிகழ்வில் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின், மாணவிகளின் நடன நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

இதன்போது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அச்சிடப்பட்ட இந்து அறநெறி பாடசாலை மாணவர்களிற்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான புத்தகங்கள் பிரதமரின் பாரியார் சிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஸவினால் மாணவர்களுக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் அக்ஷராத்மானந்த மஹராஜ் சுவாமி, பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் ராமசந்திர குருக்கள் பாபு சர்மா உள்ளிட்ட இந்து மதகுருமார் பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

தேசிய பொங்கல் விழாவின் நிறைவில் இந்து மதகுருமார் இந்து முறைப்படி பிரதமரை ஆசீர்வதித்தனர்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், அங்கஜன் ராமநாதன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் மற்றும் அத்திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புதியது பழையவை