முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு காவல்துறையினரால் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, 04.01.2022 குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்த முல்லைத்தீவு நீதிபதி குறித்த நபரை நேற்று 18-01-2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணைகளை 18-01-2022 நேற்றைய தினத்துக்கு தவணையிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,
குறித்த ஆசிரியர் ஜந்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் 25000 காசுப் பிணையிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் 9 தொடக்கம் 12 மணிக்குள் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் சாட்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது எனவும் கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் 05.04.2022ஆ ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.