மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் சபை அனுமதி பெறப்பட்டதோடு, சபைத் தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்படும் மாநகர ஆணையாளரின் செயற்பாடுகள் தொடர்பில் கண்டனமும் வெளியிடப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 57வது சபை அமர்வு நேற்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் அமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், பதில் செயலாளர், கணக்காளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை நடப்பாண்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட நிலையியற் குழுக்களின் தலைவர்கள் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான வெளிப்படுத்துகைகளும் இடம்பெற்றிருந்தது.
அந்தவகையில் கலைக் குழுவின் தலைவராக மா.சண்முகலிங்கம், சுகாதாரக் குழுவின் தலைவராக க.ரகுநாதன், வேலைக்குழுவின் தலைவராக இரா.அசோக், விளையாட்டுக் குழுவின் தலைவராக து.மதன், காணிக் குழுவின் தலைவராக வி.பூபாளராஜா, நூலகக் குழுவின் தலைவராக ச.கமலரூபன், அனர்த்த முகாமைத்துவக் குழுவின் தலைவராக த.சிவானந்தராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன் பெண்கள், சிறுவர்கள் பராமரிப்பு தொடர்பில் புதிதாக குழுவொன்றும் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய அமர்வு தொடர்பில் மாநகர முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில்,
அமர்வில் கடந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இம்மாதம் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், சில இறுக்கமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
எமது அபிவிருத்தி விடயங்களில் மாநகர ஆணையாளரின் தலையீடுகள் அதிகமாக இருந்ததன் காரணமாக அவரிடம் இருந்து மீளப்பெற்ற அதிகாரங்களை அடுத்த நிலை உத்தியோகத்தர்களுக்கு வழங்கியிருந்தோம்.
அத்துடன் கடந்த சபையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் அதிகாரத்தையும் அவரிடமிருந்து மீளப்பெற்றிருந்தோம். அதேபோல் கொடுப்பனவு சம்மந்தமான அங்கீகாரத்தையும் அவரிடமிருந்து மீளப்பெற்று பிரதி ஆணையாளருக்கு வழங்கியிருந்தோம்.
ஆனால் பிரதி ஆணையாளரும் மேற்படி விடயங்களைச் செய்வதற்கு முன்னர் ஆணையாளரிடம் ஒப்புதல் பெற்றுச் செய்கின்ற நிலைமை இருப்பதால் அவரிடமிருந்து எழுத்துமூல ஆவனம் பெறப்பட்டதும் அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தீர்மானித்துள்ளோம்.
அதேபோல உலக வங்கியின் நிதி மூலம் சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியில் மட்டக்களப்பு பொதுச் சந்தையின் மேல் பகுதியில் சோலார் திட்டத்தினை மேற்கொண்டு மாநகரசபைக்கு வருமானம் ஈட்டக்கூடிய தீர்மானத்திற்கு மாநகரசபையில் அங்கீகாரம் பெற்றிருக்கின்றோம்.
இதன் மூலம் மாநகரசபைக்கு மாதாந்தம் இரண்டு இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். இதற்கு மேலதிகமாக உலக வங்கியின் நிதியின் மூலம் பொதுச் சந்தையின் மேற்பகுதியில் அமையப்பெற்றுள்ள மீன், இறைச்சி கடைகளை கீழ்ப்பகுதிக்கு கொண்டு வருவதற்குரிய செயற்திட்டத்திற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பு நகருக்குள் பல்போசனசாலை கொண்ட அமைப்பொன்றை உருவாக்கவுள்ளோம். இதன் மூலம் உள்ளுர் முயற்சியாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கக் கூடிய விதத்திலும் நகர்ப்புற மக்களுக்கு இலகுவில் உணவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்திலும் 2.5 மில்லியன் ரூபா நிதியில் இத்திட்டம் அமையப்பெறவுள்ளது.
அத்துடன், உலக வங்கியின் நிதி மூலம் கொக்குவில் மற்றும் நாவற்குடா பொதுச் சந்தைகளைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் சரியான முறையில கேள்வி கோரல்கள் இடம்பெறாததன் காரணத்தால் மீண்டும் இவ்வாரம் அக்கேள்வி கோரல் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்கும் மேலதிகமாக கடந்த வருடம் எங்களால் முன்னெடுக்கப்பட்ட சடலம் எரிக்கும் நிலையம் மற்றும் கலாச்சார மண்டப விடயம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை இருப்பதால் எமது பொறியியலாளர் பிரிவினால் ஒழுங்கு முறையான ஒத்துழைப்புபு கிடைக்காமமையாலும்,
தங்களது இயலாமை தொடர்பில் அவர்களின் எழுத்து மூல ஆவனத்தைக் கருத்திற் கொண்டும் நாங்கள் இதனை வெளிவளத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்குக் கேள்விக் கோரல் மேற்கொண்டு இதற்காக ஆலோசனைக் குழுவொனன்றையும் உருவாக்கி படவரைஞர்களின் உதவியுடன் முழு கட்டுமான வேலைகளையும் அவர்கள் மூலமாக அமுல்படுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கடந்த வருடத்தில் தீர்மானிக்கப்பட்ட மாவட்ட எல்லை வளைவுக் கோபுர வேலைகளையும் இதே குழுவின் ஊடாக நடைமுறைப்படுத்தவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெபர் மைதானத்தில் எவ்வித தொழில்நுட்ப ரீதியான ஆய்வும், அறிவும் இல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் ஆணையாளரினால் மேற்கொள்ளப்பட்ட குப்பைகளைக் கொட்டி பூமரம் நடும் செயற்திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அதனை அப்புறப்படுத்தவும் விளையாட்டு வீரர்களுக்கு அந்த இடத்தைப் பாவனைக்கு வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடம் தான் விளையாட்டு வீரர்கள் உடல் உஷ்ணப்படுத்தும் இடமாகவும், பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும் போது இல்ல அமைப்பு வேலைப்பாடுகளை மேற்கொள்ளும் இடமாகவும் இருக்கின்றது.
இதற்கு மேலதிகமாக ஊறணிச் சந்தியில் இருந்த கருவேல மரங்களை எவ்வித ஆய்வும் இன்றி அப்புறப்படுத்தியிருப்பதாக முறைப்பாடு கிடைத்தது.
கருவேல மரம் சூழலுக்குப் பாதிப்பு என்றாலும் அது தற்போது இருந்த இடம் பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தாத இடம்.
ஆனால், தற்போது அதனை அகற்றுவதாகக் கூறி அதனை குப்பை மேட்டில் இட்டதால் அங்கிருந்து அதன் விதைகள் அதனைச் சூழவுள்ள பிரதேசத்திற்குப் பரவும், அதிலிருந்து கூட்டெரு தயாரிக்கும் நிலையத்தில் சேரும், அந்தக் கூட்டெரு மூலம் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பரவும் வழிவகைகளையே ஆணையாளர் தொழில்நுட்ப ஆலோசனையின்றி செயற்படுத்தியுள்ளார்.



