மீனவ பிரச்சினை தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நிமித்தம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் விரைவில் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை அமைச்சர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இந்திய மீனவ பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு பொறிமுறையொன்றை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் இதன் போது இணக்கம் காணப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதேவேளை இரு தரப்பு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவாரத்தை மூலம் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சவார்த்தையின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் சர்வதேச நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட நிலைமைகளில் இந்திய அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கள் பாரிய உதவியாக அமைந்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் இலங்கைக்கு ஆரோக்கியமான பொருளாதார நகர்வினை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமின்றி தனியார் துறைகளிலும் இந்தியாவின் முதலீடுகள் இலங்கைக்கு மேலும் வலுசேர்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
