மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ ஏற்பட்டு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திங்கட்கிழமை மாலை தனது வியாபார நடவடிக்கைகளை முடித்து கடையை பூட்டிவிட்டு கடை உரிமையாளர் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை 5.45 மணி அளவில் குறித்த கடையினுள் இருந்து புகை வெளிவருவதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.
இவ்விடையம் குறித்து கடையின் உரிமையாளருக்கு அயலவர்கள் தெரிவித்தனர் அவர் விரைந்து சென்று கடையைத் திறந்தபோது கடையினுள் இருந்த அனைத்துப் பொருட்களும் தீப்பற்றிக் கொண்டிருந்ததை அவதானித்தனர்.
எனினும் அங்கிருந்த அயலவர்களின் உதவியுடன் ஏனைய கடைகளுக்குத் தீ பரவாமல் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் குறித்த கடையிலிருந்து பிளாஸ்ற்றிக், மற்றும் அலுமினியம் உள்ளிட்ட, பல பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இத்தீவிபத்துச் சம்பவம் மின்னொழுக்காக இருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து விரைந்து சென்று களுவாஞ்சிகுடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



