நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் விசனம்

கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்று மாலை முதல் கிளிநொச்சி பிரதேசத்தில் எரிபொருள் நிலையங்களில் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தாம் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளதாக பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிளிநொச்சிக்கான எரிபொருள் விநியோகத்திற்கான மத்திய நிலையம் அனுராதாத்தில் அமைந்துள்ளதாக, எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மத்திய நிலையத்தின் ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு இரண்டு நாட்களாக இழுத்தடிப்பு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கையிருப்பில் உள்ள மிக குறைந்த அளவிலான பெற்றோலை அத்தியாவசிய தேவையின் நிமித்தம் வருவோருக்கு உறுதிப்படுத்திய பின் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ள இவ்வாறு வரிசையில் காத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பின் சில பகுதிகளில் டீசலுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், அதிகாலையில் சில எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாகவும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், எரிபொருள் விலைகளை அதிகரிக்கும் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள் விலை அதிகரிப்பானது நள்ளிரவில் மேற்கொள்ளப்படவேண்டியது என்பதால் குறித்த பொறுப்பினை நிதி அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் விலை அதிகரிப்பின்றி எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலையீடின்றி மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான பெறுமதியினை ரூபாவினை மின் சக்தி அமைச்சு மத்திய வங்கிக்கு செலுத்தும் பட்சத்தில் அதற்கு இணையான டொலரினை பெற்றுக்கொடுக்க இலங்கை மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கப்பல் கட்டணமின்றி எரிபொருளை பெற்றுக்கொடுக்கவும் எரிசக்தி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு மின் சக்தி அமைச்சுக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின் விநியோகத்தடையின்றி சீராக மின் விநியோகத்தினை முன்னெடுக்க வேண்டுமாயின் மின் பாவனையாளர்கள் சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
புதியது பழையவை