மட்டக்களப்பிலிருந்து நாளை வெளிவரும் மற்றுமொரு திரைப்படம்


இலங்கை தமிழ் சினிமாவில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களும் இங்குள்ளவர்களும் ஊக்கப்படுத்தும்போது மேலும் இலங்கை தமிழ் சினிமா துறை வளர்ச்சியடையும் என மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக குறுந்திரைப்படங்கள்,முழு நீளத் திரைப்படங்களின் வருகை மிக வேகமாக இருக்கின்றது. அதே விதத்தில் நாளை வியாழக்கிழடை (24) றிச்சட் என்னும் முழு நீளத் திரைப்படம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இளம் கலைஞர்களின் படைப்பாக வெளிவர இருக்கின்றது.

இத் திரைப்படம் தொடர்பிலான ஊடக சந்திப்பு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இதன்போது இத்திரைப்படம் தொடர்பில் இயக்குனர் கிருஸ்ணகுமார் பிறேமலக்சன் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 24ம் திகதி முழு நீள திகிலூட்டும் திரைப்படமொன்று சாந்தி மற்றம் செல்லம் திரையரங்குகளில் வெளிவரவிருக்கின்றது. 

இதற்கு மக்களின் ஆதரவினை நாங்கள் கோரி நிற்கின்றோம். இத்திரைப்படம் சில உண்மைக் கதைகளைத் தழுவியதாகவும் கற்பனை கலந்த கதாம்சம் கொண்டதாகவும் இருக்கின்றது.

இதில் பிரதான கதாபாத்திரமேற்று விஸ்ணுஜன் மற்றும் இணை கதாபாத்திரமா சத்யா உட்பட மாவட்டத்தின் பல கலைஞர்கள் நடித்துள்ளார்கள்.

சினிமாத்துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இளைஞர்கள் இன்று முன்வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான ஆதரவுத் தளம் என்பது மிகக் குறைவாகவே இருக்கின்றது. எனவே எமது இளைஞர்களின் இவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது உறவுகள் இவ்வாறானவர்களை ஊக்கப்படுத்தி மென்மேலும் படைப்புகளை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பேட் டொட் ஸ்ரூடியோ பிறைவட் லிமிடட் மற்றும் ஆர்.என்.பி என்டர்டெயின்மன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வழங்கும் இத்திரைப்படமானது நாளை வியாழக்கிழமை கல்லடி சாந்தி திரையரங்கில் மாலை 05.15 மற்றும் 06.45 காட்சிகளிலும், செங்கலடி செல்லம் திரையரங்கில் மாலை 06.15 காட்சியும் காண்பிக்கப்பட இருக்கின்றது.

எனவே மக்கள் இதற்கான ஆதரவைத் தந்து இத்திரைப்படத்தினைப் பார்வையிட்டு எமது கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் விஸ்ணுஜன் நடிகை சத்யா ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.தமிழ் சினிமா வளரவேண்டுமானால் இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் அதற்கு ஆதரவு வழங்கவேண்டும்.அதேபோன்று தென்னிந்திய சினிமாவுக்கு புலம்பெயர் தேசத்தில் வழங்கும் முக்கியத்துவம்போன்று வடகிழக்கிலிருந்து வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்கும்போது தமிழ் சினிமா வளர்ச்சியடைவதுடன் கலைஞர்களும் வாழும் நிலையேற்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
புதியது பழையவை