அம்பாறை - கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற மாணவனின் சடலம் மீட்பு

(பாறுக் ஷிஹான்)

கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் 3 மாணவர்கள் பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான அன்று தீர்த்தம் உற்சவத்தில் நீராடச் சென்ற போது கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இரு மாணவர்கள் உயிர் தப்பிய நிலையில் கரை சேர்ந்ததுடன் மற்றுமொரு மாணவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் மாயமானார்.

இவ்வாறு காணாமல் சென்ற பெரியநீலாவணை 1 பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இராசநாயகம் சனுஜன் என்ற மாணவனின் சடலம்  (27) புதன்கிழமை மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சுமார் 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை