நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது சிரமங்களை எதிர்நோக்கிவரும் பொது மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் நேற்று (14) தற்காலிகமாக குறுந்தூர பேரூந்து (City Shuttle Service) சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விலையேற்றம் காரணமாக முற்சக்கர வண்டி உள்ளிட்ட பிரயாண சேவைகள் மிகக் குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவற்றின் வாடகைக் கட்டணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக உள்ளக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள், மாணவர்கள், அரச தனியார் அலுவலகங்களின் பணியாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் எனப் பலர் தமது போக்குவரத்துச் செலவினைக் கருத்திற்கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இந் நிலையில் இதனைக் கருத்திற்கொண்டு திரு.சுஜித் லியோன் லோறன்ஸ் எனும் தனிநபரின் ஊடாக குறித்த குறுந்தூர பேரூந்து (City Shuttle Service) சேவையினை தற்காலிகமாக முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு அச் சேவையானது உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அருட் தந்தை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஷ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பேருந்து சேவையானது வேலை நாட்களில் நாள் தோறும் காலை 6:35 தொடக்கம் மாலை 6 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 8:00 மணி தொடக்கம் 4:00 மணி வரைக்கும் வழங்கப்படவுள்ளது
மேற்படி சேவைக்கான ஒருவழிக் கட்டணமான பொதுமகன் ஒருவருக்கு 50 ரூபாயும், பாடசாலை மாணவர்களுக்கு ரூபா 40 ரூபாயும் அறவிடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இச் சேவையினை நவீன தகவல் தொழில்நுட்பத்தின் துணையுடன் பொது மக்கள் தமது கையடக்க தொலைபேசியின் ஊடாக கண்காணித்துக் கொள்ளும் வசதிகளும் நிறுவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






