மட்டக்களப்பில் பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸாருக்கு பாலியல் தொல்லை - பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் சாரதியை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் (07) திகதி உத்தரவிட்டார்.

புதன்கிழமை பிற்பகல் அங்கு சாரதியாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையத்தில் வைத்து, பெண் பொலிஸ் உத்தியோத்தரின் கையைப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொண்டு வந்ததையடுத்து உடனடியாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனை வழங்கியதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் அம்பாறையைச் சேர்ந்த 35 வயதுடைய, பொலிஸ் சாரதியாவார்.

இவரை (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
புதியது பழையவை