சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீடும் எதிர்வரும் 25 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீட்டுடன் கொழும்பு நூபுர ஷேத்ரா மாணவியரின் ‘கணேச வந்தனம் – மோகினியாட்டம்’, மட்டக்களப்பு சிறுவர் – சிறுமியர் இல்ல மாணவ, மாணவிகளின் ‘கூத்து – பாரம்பரிய நாடகம்’, வில்லுப்பாட்டு மற்றும் கொழும்பு பிஷப் கல்லூரி மாணவர்களின் ‘காளிங்க நர்த்தனம்’ ஆகிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.