சிறுவர்களுக்கு ஏற்படும் தொற்று - பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களுக்கு தொற்று நோய் பரவல் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா என்பவரே இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறுவர்களின் கை, கால் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தளும்புகள் அல்லது வெள்ளை நிற கொப்புளங்கள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெற்றோர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், 6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த தொற்று ஏற்படுவதால், அவ்வாறான கொப்புளங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுமாயின் பிள்ளைகளை வெளி இடங்களுக்கு அனுப்பாது சில நாட்கள் வரை வீடுகளில் வைத்திருக்குமாறும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை