மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் அல் மஜ்மா நகர் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான சீனிமுகம்மது முகம்மது காசிம் வயது (74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் தொடர்பில் மேலும் தெரியவருவது,

நேற்று (25-11-2022) இரவு மேற்படி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையினை கிராமத்தவர்கள் சத்தமிட்டு துரத்தியுள்ளனர்.

குறித்த யானையானது கிராமத்தினை விட்டு சென்று விட்டதாக எண்ணி வீட்டின் வளவினுள் இருந்தபோது திடிரென அங்குவந்த யானை முதியவரை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மனைவி அன்றைய தினம் ஓட்டமாவடிக்கு உறவினர்களை சென்றதனால் தனிமையிலேயே இவர் இருந்துள்ளார்.

மறு நாள் காலையிலே இவரது நடமாட்டம் காணப்படாத நிலை கண்டு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாழைச்சேனை கடதாசி ஆலையை அண்மித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதாகவும் இரவு வேளைகளில் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதுடன் சேதங்களையும் ஏற்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் குறித்த காட்டு பகுதியினை அகற்றி தருமாறும் கேட்கின்றனர்.

யானைகளின் அட்டகாசம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் பல முறை தெரிவித்தும் கவனிக்காமல் உள்ளதாக பிரதேச வாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
புதியது பழையவை