ஜனாதிபதியால் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்திகள்,எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், மருத்துவமனைகள்,மருந்தகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம்
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த பிரகடனத்தை வெளியிட்டதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரசாங்க திணைக்களம், உள்ளூராட்சி மன்றம், கூட்டுறவுச் சங்கம் அல்லது வேறு எந்த அரச நிறுவனங்களாலும் வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.