2023 ஆம் ஆண்டின் அரசாங்க சேவை சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (02) காலை கிழக்கு மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இச்சத்தியப் பிரமாண நிகழ்வின்போது, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு, அரச சேவை ஊழியர்களுக்கான சத்தியப் பிரமாணத்தையும் செய்து வைத்தார்.
அதயடுத்து அவர் அங்கு உரையாற்றுகையில், வரலாற்றில் முன்னொருபோதும் அனுபவித்திராத பொருளாதார நெருக்கடிக்குள் மக்களின் வாழ்க்கை மிகவும் கஷ்ட நிமைலைக்குள்ளாகியுள்ளது.
இக்காலப் பகுதியில், உலகில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த நாடுகள் அந்தச் சவால்களை வெற்றி கொள்வதற்கு அறிமுகப்படுத்திய மறுசீரமைப்புக்கள் பற்றிய அனுபவங்களை ஆராய்ந்து அரச சேவையில் தேவையான மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கும், அரச செலவுகளைக் குறைத்து அரச வருமானத்தை அதிகரிப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும் என முதலமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ளும் ஒருமித்த எண்ணத்துடன் அனைத்து அரச ஊழியர்களும் அரச வளங்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்காலப் பரம்பரையினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதன் அவசியம் பற்றியும் இதன்போது வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் அணைக்குழுவின் செயலாளர், உதவிச் செயலாளர்கள், சிரேஷ்ட உதவிச் செயலாளர்கள், சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர், அமைச்சின் மற்றும் திணைக்களங்களின் கணக்காளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கொண்டனர்.