உள்ளூராட்சி சபை வேட்புமனுக்களை இரத்து செய்ய நடவடிக்கை - நாடாளுமன்றில் தீர்மானம்!



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் சில வாரங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரேரணை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் கால அவகாசம் காரணமாக வேட்புமனு தாக்கல் செய்த அரசு ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உருவாகி உள்ளதால், அந்தந்த வேட்புமனுக்களை இரத்து செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இது தொடர்பில், நாடாளுமன்றத்தில் விசேட தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பில் சட்ட ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை