8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகி ஒருவருடம் பூர்த்தி!



இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகி இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கரமசிங்க கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்டார்.

நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு, முகங்கொடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினரே பிரதான காரணம் என தெரிவித்து, மக்கள் நாடு முழுவதிலும் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

அதன்பின்னர், இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரசின் பிரதான அலுவலகங்களை மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையில் இருந்து வெளியேறி மாலைத்தீவு ஊடாக சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார்.

அவர் அங்கு, தாம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டிருந்தார்.

பின்னர், நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவற்றில் ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளை பெற்று 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் தெரிவானார்.

இதேவேளை, ஒரு வருட பூர்த்தியின் பின்னரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அயல்நாடான இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை