மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் கைது!



விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.

கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே இன்றையதினம்(28-11-2023) கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று(27-11-2023) மாலை மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது.

காவல்துறையினரின் விசாரணை
இதன்போது தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டு கொடிகாமம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபரிடம் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அறிய முடிகிறது.
புதியது பழையவை