தலைவரை காட்டி கொடுத்து விட்டார்கள் !படுவான்கரையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்


மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில்  கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரை சட்டவைத்தியரிடம் உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (29-11-2023) உத்தரவிட்டார்.

பட்டிப்பளை கொக்கட்டிச்சோலையை  சேர்ந்த அவர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடாவில் தற்போது வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான கடந்த 26ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வே.பிரபாகரன் அண்ணா தலைவர் என பெயரை  எழுதி வாங்கி கொண்டு அங்கிருந்து கொக்கட்டிச்சோலைக்கு பஸ்வண்டியில்  பயணித்துச் சென்றுள்ளார்.


அங்கு சென்ற அவர் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை நோக்கி வீதியால் நடந்து சென்றவர் தலைவரின் பிறந்தநாள் கேக் வெட்ட போறேன் கடையை ஏன் பூட்ட வில்லை தலைவரை காட்டி கொடுத்து விட்டார்கள் என சத்தமிட்டு சென்ற நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து  புலனாய்வு பிரிவினர் அவரை பின் தொடாந்து சென்றனர்.

அவர் துயிலும் இல்லம் சென்ற நிலையில் அவரை புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் இணைந்து கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இவரது கணவர் விடுதலைப் புலிகளில் இருந்து உயிரிழந்துள்ளதாகவும், புலிகளின் மட்டக்களப்பு படை தளபதி றமேசின் மச்சாள் முறையான உறவினர் எனவும் தற்போது  தனிமையில் நாவற்குடாவில்  வசித்து வருவதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவருக்கு எதிராக  தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சடத்தின்கீழ் வழக்கு தொடர்ந்து இவரை 29ம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா என கண்டறிய சட்டவைத்தியரிடம் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
புதியது பழையவை