தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தயார் - செல்வம் அடைக்கலநாதன் உறுதி



தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (03.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், தமிழ்க் கட்சிகள் ஐந்தும் ஒன்றிணைந்து ஓரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பொதுச் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஏற்கனவே, நாங்கள் தமிழரசுக் கட்சியின் தனிச் சின்னத்தில் பயணித்தோம். பல வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் பயணித்தோம்.


உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என்று அவர்கள் வெளியில் சென்றதன் காரணமாக நாங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.

எங்களை பொறுத்தவரையில் நாங்கள் அனைவரும் பொதுச் சின்னம் ஒன்றில் பயணிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

பொதுச் சின்னம்
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறீதரனின் கூற்றை நான் வரவேற்கின்றேன். ஒரு பொதுச் சின்னத்தில் நாங்கள் அனைவரும் அணி திரள்வோம்.


பொதுச் சின்னத்திற்கு வீட்டுச் சின்னம் மாற்றப்பட்டால் கூட எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. தனிப்பட்ட கட்சிக்குள் கூட்டாக இருப்பது நன்றாக அமையாது.

பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை