இந்த நாட்டு மக்களுக்கு பொருளாதாரத் தீர்வுகள் குறித்து அக்கறையில்லை - ஜனாதிபதி ரணில்



அரசியல் தீர்வுகளைத் தேடும் இந்நாட்டு மக்கள் பொருளாதாரத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று நடைபெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

 'சுபீட்சமான எதிர்காலத்திற்கான பயணம்' என்ற பெயரில் இளைஞர் அமைப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு வடக்கு மாகாண கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதன்போது இளைஞர் மத்தியில் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்.

கோவிட் – பொருளாதார நெருக்கடியின் காரணமாக 4 வருடங்களாக தொழில்களை வழங்க முடியாமற்போனதோடு, தொழில் கிடைத்த பலரும் அவற்றை இழந்து நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அதனால் புதிய பாதையில் சென்று தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமா, இல்லாவிட்டால் பழைய முறையில் சென்று வீழ்ச்சியடைவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.


அதனையடுத்து மன்னார் மாவட்ட வர்த்தர்களுடன் நேற்ற இடம்பெற்ற சந்திப்பில், அரசு முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிப் பயணிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் பெருமளவான முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகைத் தருவர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பரந்தளவான அபிவிருத்திச் செயற்பாடுகள்
காலத்துக்குக் காலம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல், சரியான பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ச்சியாகப் பின்பற்றினால் நாடு முன்னேற்றமடையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காகவே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தைச் சமர்பித்திருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனை எந்தவொரு அரசும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.

நீண்டகாலமாக அரசியல் ரீதியான தீர்வைத் தேடும் இந்நாட்டு மக்கள், ஒருபோதும் பொருளாதாரத்தின் பக்கமாக தீர்வைத் தேடவில்லை என்றும், சரியான பொருளாதாரக் கொள்கையின் ஊடாக மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


சரிவடைந்திருந்த பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் கட்டியெழுப்ப தன்னால் முடிந்ததெனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரம் வலுவடையும்போது, அதன் பலன்கள் சகல தரப்பினருக்கும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பரந்தளவான அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில்  இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண ஆளுநர். பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்டவர்களும் அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதியது பழையவை