ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில் இலங்கையர் ஒருவரின் பயணப் பொதியிலிருந்து தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக கூறப்படும் சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சீன பிரஜைகள், இலங்கையரிடம் இருந்து இரண்டு 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான வைர மோதிரங்கள், தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்கப் பதக்கம் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த இலங்கையர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-06-2024) அபுதாபியில் இருந்து இலங்கைக்கு சீன பிரஜைகளுடன் பயணித்ததாகவும், தனது பையை ஆசன எண் 09இற்கு மேலே உள்ள விமான மேல்நிலை கேரியரில் வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தரையிறங்கும் நேரத்தில் தனது பொருட்கள் காணாமல் போனது அறிந்து, இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், அந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் சோதனை செய்யப்பட்டனர்.
இதற்கமைய, சோதனையின் போது, 31 மற்றும் 36 வயதுடைய சீன பிரஜைகள் இருவரிடமும் திருடப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்தே குறித்த இருவரும் விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.